Friday, October 15, 2010

"சவால்" - சவால் சிறுகதை


சிவா கரையில் பைக்கோடு நின்றுகொண்டிருந்தான். காமினி கடல் அலைக்குள் விழுந்து அவளை முழுவதுமாக நனைத்துக்கொண்டிருந்தாள். ஈர வாட்ச்சை துடைத்து அவள் மணி பார்க்க முயன்றபோது இரண்டு முள்ளும் ஒரே நேர்கோட்டிலிருந்தது. அந்த நொடியில் திடீரென்று அவள் கண் முன் தோன்றிய மீனவக்கிழவனொருவன், அவளது கையில் மணிப்பர்ஸ் ஒன்றை திணித்துவிட்டு, ஒரு திசையில் ஓடி மறைந்தான்.
மணிப்பர்ஸை அழுத்திப் பார்த்து, புன்னகைத்த காமினி, அதை தன் பேன்ட்டிலிருந்த சீக்ரெட் பாக்கெட்டுக்குள் நுழைத்துக்கொள்ள முயன்றாள். அது 'மினி'பர்ஸாக இருந்த காரணத்தினால் கச்சிதமாய் உள்ளே போய் ஒளிந்துக்கொண்டது. நிம்மதி பெருமூச்சு விட்டு, எகிறி எகிறி குதித்து சிவாவை நோக்கி கையசைத்தாள், காமினி.

சிவா தலையில் அடித்துக்கொண்டு பைக்கை கிளப்பி ' கடலோர காவல்படை' என்ற ஸ்ட்டிக்கரோடு சற்று தொலைவில் நின்றுக்கொண்டிருந்த ஜிப்சியை நெருங்கி, " சார்!. . . . சார்!. . . "என்று குரல் கொடுத்தான்.
கான்ஸ்டெபில் ஒருவர் திமிர்முறித்துக்கொண்டே எட்டிப்பார்த்து, "யாரு? ஏன்ன சார் வேணும்? "என்றார்.
"அந்த பாறை மேல ஒரு வயசுப்பொண்ணோட உடல்கிடக்கற மாதிரி தெரியுது. கொஞ்சம் என்னன்னு பாருங்களேன்". சிவா சொல்லிவிட்டு நகர்ந்து, ஒரு மரத்தடியில் பைக்கை ஆப் செய்துவிட்டு நின்றுகொண்டான்.
"அடச்சே! என்ன பொண்ணு இவ? இந்த டிராமாவெல்லாம் ஏன் எதுக்குன்னே சொல்லாம, கல்யாணத்துக்கும் இதுக்கும் ஒரு முடிச்சபோட்டுட்டு, நம்மல பேசவுடாம பண்ணிட்டாளே! எனக்கு ஒன்னுமே புரியலயே! ஏன்று புலம்பிவிட்டு, 'இப்போ இவள போலீஸ் எந்த ஆஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போறாங்களோ, அந்த ஆஸ்பிட்டலோட பின்புற கேட்ல நாம வெயிட் பண்ணனும் ' என்று அடுத்து அவன் செய்யவேண்டியதாக காமினி சொல்லியிருந்ததை ஒருமுறை நினைத்து முடித்தான்.
இரண்டு நிமிடத்தில் ஆம்புலேன்ஸ் அங்கு வந்து காமினியை தூக்கிக்கொண்டு பறந்தது. சிவா பின்தொடர்ந்தான்.

சியு-வில் நான்கைந்துபேரோடு காமினியும் கிடத்தப்பட்டிருந்தாள். காமினி லேசாக கண்திறந்து பார்த்தாள். அங்கிருந்த நர்ஸ் இருவர், ஏதோ ஒரு இயந்திரத்தை தூக்கிக்கொண்டு அந்த அறையைவிட்டு வெளியேறினார்கள். அடுத்த நொடி அந்த அறையில் எஞ்சியிருந்த டூட்டி டாக்டரின் செல்போன் அலறியது. "எஸ். . ஸ்பீக்கிங்" என்று சொல்லிக்கொண்டே வார்ட்டைவிட்டு அந்த டாக்டர் அகன்றதும், காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்க்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கிவிட்டு, அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலை திறந்து வெளியே குதித்தாள்.

மருத்துவமனையின் பின்புற வாசலை நோக்கி ஓடிக்கொண்டிருந்த காமினி, ஒருமுறை அந்த 'மினி'பர்ஸ் பத்திரமாக இருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக்கொண்டு ஓடினாள்.
"என்ன காமினி இது? ஒரு மணி நேரமா நிக்கறேன். எதுக்கு இந்த விளையாட்டெல்லாம்? "பைக்கோடு நின்றிருந்த சிவா, எரிச்சலின் உச்சத்தில் கேட்டான்.
"அப்புறம் சொல்றேன். நீ முதல்ல வண்டிய எடு. "அவசரப்படுத்தினாள், காமினி.
பைக்கை வேகமாக ஓட்டத்தொடங்கியவன் அந்த தெருமுனையின் குறுக்குச் சந்தில் போய் நிறுத்தி, பைக்கின் டேங்க் கவரில் கையைவிட்டு வெளியே இழுத்தபோது, துப்பாக்கி ஒன்று அவன் கையோடு வந்தது.

"ஸாரி. . .எனக்கு வேற வழி தெரியல" என்று காமினியின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்தான், சிவா. "சொல்லு..! "என்று சொல்லிக்கொண்டே துப்பாக்கியை சற்று அழுத்தினான்.
" ச்சீ! காமெடி பண்ணாத சிவா..ஏது இது. உங்கப்பாகிட்டேர்ந்து 'சுட்டு'ட்டியா?. "
"அது இருக்கட்டும். காலையிலேர்ந்து என்ன நடந்துக்கிட்டிருக்கு? எதுக்கு அதிகாலையில போன்பண்ணி பீச்சுக்கு கூட்டிட்டு போகச்சொன்ன? அந்த தாத்தா உங்கிட்ட என்ன குடுத்தாரு? அத வாங்கிக்கிட்டு நீ ஏன் செத்த மாதிரி நடிச்ச? என்னை எதுக்கு போலீஸ்கிட்ட அப்படி சொல்லச்சொன்ன? இப்போ ஆஸ்பிட்டலேர்ந்து தப்பிச்சு எங்கபோற? சொல்லு காமினி. . .எனக்கு தலையே வெடிச்சுப்போகிறமாதிரி இருக்கு. "
"உங்க வீட்டுக்குத்தான் போகணும்." காமினி சொல்லி கண் சிமிட்டினாள். "விளையாடாத காமினி…"
"உண்மையாகவேதான். இந்த டிராமாவ உங்கப்பாத்தான் முடிச்சுவைக்கணும்"
"அப்பாவா? "
"அலறாத சிவா! "
"ஐயோ! உனக்கு கணவனாவறதுக்கு முன்னாடி மற கழன்டு பைத்தியமாயிடுவேன்போல இருக்கே! "
"பரவாயில்ல. அப்பவும் உன்னத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன். ஏன்னா. . நான் ஒம்பைத்தியம். "

காமினியை 'கேட்'டிலேயே விட்டுவிட்டு, "நான் முதல்ல போறேன். கொஞ்ச நேரம் கழிச்சு நீ வா. எனக்கு பயமா இருக்குது. "என்ற சிவா, குழப்பத்தோடு வீட்டினுள் நுழைய முற்பட்டபோது அந்த வாக்கியங்கள் வந்து அவன் காதில் விழுந்தது.
"மரகதம். . .சிட்டிய ஒட்டிய கடல் பகுதியில கள்ள கடத்தல் நடக்கிறதா புலனாய்வுத் துறை தகவல் அனுப்பியிருக்கு. எங்காளுங்க விழிப்போட செயல்படறாங்கன்னு நான் நம்பறேன். அத நிரூபிக்கத்தான் இன்னைக்கி ஒரு டெஸ்ட். நம்ம சிட்டி கோஸ்ட்டோட நாலு ஸ்ப்பாட்லேர்ந்து நானே நாலு ஆளுங்கள செட்பண்ணி கடத்தல்ல ஈடுபடுத்தியிருந்தேன். அவுங்க, கடலோரத்துல இருந்து டைமண்ஸ்ச எங்கிட்ட கொண்டுவந்து சேர்க்கறதுதான் டாஸ்க். ஆனா பாரு. இதுவரைக்கும் மூணுபேர வழியிலேயே எங்காளுங்க பிடிச்சுட்டாங்க. இன்னும். . . "பரந்தாமன் முடிப்பதற்குள்,
" இன்னும் ஒரு ஆளுதான. . .நிச்சயம் உங்காளுங்க பிடிச்சுடுவாங்க." மரகதம் அழுத்தமாக சொல்லவும், "முடியாது" என்று சொல்லிக்கொண்டே, வழியில் நின்றுக்கொண்டிருந்த சிவாவை தள்ளிக்கொண்டு காமினி உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
"டி.எஸ்.பி சார். .. இந்தாங்க, நீங்க 'முடிஞ்சா' கொண்டுவந்து சேர்க்கச்சொன்னது"
"வாவ்! காமினி…வெல்டன். எப்படியோ போலீஸ் கண்ணுல மண்ண தூவிட்டு இந்த டைமண்ட கொண்டுவந்துட்டியே! என்று பாராட்டினார், பரந்தாமன்.
"அப்பா என்னப்பா இதெல்லாம்..? "சிவா முகத்தை சுளிக்க,
"மை டியர் சன்…கோஸ்ட்ல எங்காளுங்க எவ்வளவு விழிப்போட இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கனும். . .அதே சமயத்துல எனக்கு மருமகளா வரப்போறவ சாமார்த்தியசாலியான்னும் தெரிஞ்சிக்கனும். ஸோ… .டூ இன் ஒன் டெஸ்ட். எப்படி என் ஐடியா? "
மரகதம் அவரை ஒரு பார்வை பார்க்க, அதன் அர்த்தம் விளங்காதவராய்,"என்ன மரகதம் பார்க்குற? அடுத்தது என்ன பண்ணப்போறேன்னுதானே. . பர்ஸ்ட். .. எங்காளுங்கள இன்னும் டைட்டா முடுக்கனும். நெக்ஸ்ட.. .நம்ம சிவா-காமினி கல்யாணத்த முடிக்கனும். " என்றார்.
சிவாவும் காமினியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள,"ஆனா மரகதம். . .காமினிகிட்ட நாம ஜாக்கிரதையா இருக்கனும். நம்மகிட்டயிருந்து பையன கடத்திட்டு போனாலும் போயிடுவா" பரந்தாமன் சொல்ல, "அங்க்கிள். . . "என்று சிணுங்கினாள், காமினி.

Sunday, August 8, 2010

தொலைதூரக் காதல்

எல்லையிலே துப்பாக்கி
ஏந்தி நிக்கும் எம் மாமா
இந்த கொல்லைபுரத்தழகி
ஒன பார்க்க வரலாமா?

ஆண்டுக்கு ஒரு முறைதான்
கிராமத்துக்கு நீ வருவ
அந்த இருபது நாளுலதான்
எங்கண்ணில் நீ படுவ

சொற்ப நாட்கள் அது
சத்தியமா போதல
தவணை முறையிலெல்லாம்
சொல்லலாமா காதல?

எனக்காக ஏங்கறையோ - இல்ல
குறட்டைவிட்டு தூங்கறியோ
உன்னோட நெனப்பால – நான்
படும்பாட்ட கேட்கறீயா?

மலைக்கோயில் போனாக்கா
பாறையில நீ தெரிவ
கண்மூடி படுத்தாக்கா
எம் மனசெல்லாம் நீ நெறைவ

உன் கடுதாசி தலைக்கு வச்சி
படுத்தாக்கா நீ வருவ
உன் போட்டோவ வச்சிக்கிட்டா
கனவில்வந்து எனை தொடுவ

கண்ணாடி பார்க்கையில
எம் பின்னாடி நிக்கறியே
தலைவாரும்போதெல்லாம்
நீ சீப்பில் வந்து சிக்கறியே

என்னோட தலையணைக்கு
உன் தலை வந்து முளைக்குது
அது அப்பப்போ கீழிறங்கி
என் தூக்கத்த கலைக்குது

நீ முரட்டு முத்தமிட
நான் துடிச்சு சத்தமிட
ஆசையா இருக்குதைய்யா
உன்னோடு யுத்தமிட

அருகிலிருந்தாலும்
ஆயிரம் மைல் தள்ளிஅப்பால இருந்தாலும்
உன் நெனப்பு அச்சில்தான்
என்னுலகம் சுத்துது

நமக்கு நடுவால
இருக்கிற தூரத்தால
ஏக்கம் பெருக்கெடுத்து
அழறேன் பிரிவு பாரத்தால

தனிமை கொல்லுதென்ன
புரிஞ்சிக்கோ என் தலைவா!
பிரிஞ்சிருக்க முடியலையே
நீ வர்றீயா நான் வரவா?

-புதுவைப்பிரபா-

Sunday, August 1, 2010

இணையதள கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு



ஈகரைத் தமிழ் களஞ்சியம் என்னும் இணையதளம் நடத்திய கவிதைப் போட்டியில் தொலைதூரக் காதல் என்னும் தலைப்பிலான எனது கவிதைக்கு இரண்டாம் பரிசு. . . . மேலும் விவரங்களுக்கு. . .கீழே காணும் சுட்டியை சொடுக்கவும்
http://www.eegarai.net/-f48/3--t35942.htm

Wednesday, June 23, 2010

கவிதைப் போட்டியில் பரிசு


கண்மணி கிரியேன்ஸ் நாடக மன்றம் நடத்திய ``தமிழும் தமிழரும் `` தலைப்பிலான 16 வரி கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு. . .

Monday, May 31, 2010

செத்து மிதக்கும் வார்த்தை


ஏற்றிவிட்ட ஏணியை
எட்டி உதைக்கும் கால்களுண்டு

சுமக்கும் தோள்களில்
தோல் பிய்க்கும் நகங்களுண்டு

கரையேற்றும் படகின் மீது
காரிகாரித் துப்புவொருண்டு

உதவிக்குவரும் வாகனங்களில்
பாகங்களை கழற்றிக்கொண்டு
இறங்கிச்செல்வோருண்டு

துயர நேரங்களில்
துணைக்குவரும் கைகளில்
விரல் பிடுங்கிச்செல்கின்ற
விபரீத மனிதருண்டு

தினம்தினம் இதுபோன்ற
நபர்களைக் கொண்டே
நகர்த்தப்படுகிறது பெரும்பாலானோரின்
வாழ்க்கை.
இனி இவர்களின் எதிர்பார்ப்புகள்
ஏமாற்றங்களையே பிரசவிக்கும்
ஏனெனில்-
நிகழ்காலக்கடலில்
செத்து மிதக்கின்றது
நன்றி என்னும் வார்த்தை.

நானும் நீயும்


கொட்டும் மழையில்-நான்
குடை விரிப்பதில்லை

கொளுத்தும் வெய்யிலில்-நான்
நிழல் தேடுவதில்லை

நடுங்கும் குளிரில்-நான்
ஸ்வெட்டர் அணிவதில்லை

புழுங்கும் அறையில்-நான்
விசிறி கேட்பதில்லை

குடையாய் நிழலாய்
ஸ்வெட்டராய் விசிறியாய்
என் தேவைக்கேற்றபடி
மாற்றம் கொண்டியங்குகிறாய்
நீ!

ஏழ்மையின் ஏகாதிபத்தியம்


இருநூறு பிள்ளைகள்கொண்ட
தொடக்கப்பள்ளியில்-
ஆயா வேலை

உணவு ஊட்டுதல்
தூங்க வைத்தல்
கால் கழுவி விடல்
வாந்தி வாரி கொட்டுதல்
எல்லா வேலைகளுமே
சுகமாக தோன்ற-

பெருங்சுமையாய்
எனக்குள்ளே
கனக்கின்ற கேள்வியொன்று-
ஏழ்மையின் ஏகாதிபத்தியம்
என்னை
முதிர்கன்னியாக்கி
அம்மாவாக்கமலேயே
ஆயாவாக்கிவிட்டது எதனால்?

மே தினம் அன்று.. ஒரு தொலைக்காட்சியில்..

Sunday, May 2, 2010

மகளீர் மசோதா


பெண்ணே!
நாடு - நதி
மண் - மலை
ஏன்?
உலகே உன் பெயரால்தான்
குறிக்கப்பெருகிறது.

மென்தென்றல்
வன்புயல்
மல்லிகை
மலைத்தேன்
பால்நிலவு
பனிப்பொழிவு
மொழியின் மொத்த வார்த்தைகளில்
எத்தனை விழுக்காடு
உனக்கு உவமையாய். . .
உருவகமாய்…

பெண்ணே!
பெருமைப்படு
உலகமா உன்னை பெற்றெடுத்தது?
இல்லையில்லை. ..
நீதானே உலகத்தை பெற்றெடுத்தாய்?

அடுப்படிதாண்டிய
ஐம்பதாவது ஆண்டு விழாவை
கொண்டாடி முடித்துவிட்டார்கள்
நம் இந்தியச் சகோதிரிகள்
ஆனாலும் இவர்களுக்கு
இன்னுமும் இருக்கிறார்கள்
அரசியல் எதிரிகள்

புரிந்துகொள்ளுங்கள் எதிரிகளே!
இன்று பெண்கள் புகாததுறையேயில்லை!
ஆண்களுக்கு சரிநிகராய்
ஆற்றுகிறார்கள் பணியை
குறையேயில்லை!

பாராளுமன்றத்தை
நல்வழியில் நடத்துகிறாள்
பால்வழிப்பாதையில்
கோள்களைக் கடத்துகிறாள்
உலகவிளையாட்டரங்கில்
முதல் பரிசு பெறுகிறாள்
உயிர் பயம் துளியுமற்று
இராணுவத்திற்கு வருகிறாள்....
ஓவியம் தீட்டுகிறாள்….
தொடர்வண்டி ஓட்டுகிறாள்…
பேனா பிடிக்கிறாள்…
பிணத்தை எறிக்கிறாள்….

புரிந்துகொள்ளுங்கள் எதிரிகளே!
இன்று பெண்கள் புகாததுறையேயில்லை!
ஆண்களுக்கு சரிநிகராய்
ஆற்றுகிறார்கள் பணியை
குறையேயில்லை!

வெற்றிபெற்ற ஆண்களின் பின்னால்
பெண்கள் இருந்த காலம்மலையேறிற்று.
தற்போது-
பெண்களே வெற்றிமலையேறும்காலம் வந்திற்று.

இதையெல்லாம் உணராமல்
உளறித்திரியும் ஒருசிலரை
திருத்தவே முடியாது
இவர்களின் வெற்றுப்புலம்பலால்
பெண்களின் முன்னேற்றத்தை
நிறுத்தவே முடியாது

அவர்கள் கிடக்கிறார்கள்
ஆறாம் அறிவை அடகுவைத்தவர்கள்!

கவலையைவிடுங்கள்!
காற்றிடம் கொஞ்சம் காதுகொடுங்கள்!
ரகசியம் ஏதோ சொல்கிறது.
நான்வேண்டுமானால் கேட்டுச்சொல்லவா?

பெண்ணடிமைவாதிகளைப்பற்றி
தற்போதைக்கு கேள்வியில்லையாம்
மசோதாவே தோற்றாலும்
எம் மகளீர்க்கு தோல்வியில்லையாம்.

புதுவைப்பிரபா

Thursday, February 18, 2010

எனது சிறுகதைக்கு ஆறுதல் பரிசு

இலங்கை- கொழும்புவில் இருந்து வெளிவரும் "ஞானம்" கலை இலக்கிய சஞ்சீகை கடந்த ஆண்டு அக்டோபர் திங்கள் அறிவித்து நடத்திய "கலாபூஷணம் புலோலியூர் க.சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப்போட்டி-2009" ல் எனது சிறுகதை ஆறுதல் பரிசு பெற்றிருக்கிறது. விபரம். . . ஜனவரி-2010 ஞானம் இதழில். . . .

Friday, January 8, 2010

உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை


அர்த்தம் கெட்ட அகராதி

வழக்கமான நேரத்திற்கு
நீ படுக்கையைவிட்டு எழாதபோது
கழுத்திடுக்கில் கை வைத்துப் பார்க்கிறேன்
"காச் மூச்சென்று " கத்துகிறாய்

குளியலறையில் நீ இருக்கும்போது
எத்திசையில் இருந்து பெரும் சப்தம்
எழுந்தாலும்
"என்னங்க ஆச்சு" என்று
துடித்துப்போய் கேட்கிறேன்.
காதில் விழாததுபோல் மௌனம் காக்கிறாய்.

வீட்டிலிருந்து புறப்பட்டுபோய்
மணிநேரம் ஆனதும்
கைப்பேசயில் அழைத்து
"பத்திரமாக ஆபீஸ் போய்ட்டீங்களா?"என்று
கேட்டு முடிப்பதற்குள்
"ம்ம்" என்று முடிக்கிறாய்.

மதிய உணவில்
உப்பு புளி காரம்
சரியாக இருந்ததாயென்று
கேட்கபதற்கான என் அழைப்பிற்கு தவறாமல்
"ஸ்விட்ச் ஆ ப் " என்று
பதில் வந்து விழச்செய்கிறாய்.

வீடு திரும்பியதும்
உன் விரல் நுனியில் பட்டிருக்கும்
மையைக் காயமென எண்ணி
"ஐயையோ! " ஏன்று எட்டித்தொடுகையில்
கொதிகலனை தொட்டது போல்
விருட்டென்று விரல் இழுத்து
முகம் சுளிக்கிறாய்


இந்த ஓரிரு செய்கைகள் போல்
ஓராயிரம் செய்கைகள்
நடந்தேறியிருக்கிறது
இவைகளை நான்
"அக்கறை"
என்று அர்த்தப் படுத்திகொள்கிறேன்

ஆனால்
உன் அர்த்தங்கெட்ட அகராதியில்
இதற்கெல்லாம் பெயர்
"தொந்தரவு"

Thursday, January 7, 2010

விடியுமா ?



நாயான போதும் அதை நடுவீட்டில் வச்சுகிட்டு
கட்டி புடிச்சு முத்தமெல்லாம் கொடுக்கிறான் - ஆனா
சேரி மனுசன் அவன் வீட்டு வாசப்படி தாண்டாம
எட்டி ஒதச்சு நுழையறத தடுக்கிறான்

பட்டணத்தில் பொறந்துபுட்டு கஷ்டம் நஷ்டம் தெரியாம
அயல் நாட்டு பணத்துமேல நடக்குறான் - இவன்
மூணுவேள மூக்குமுட்ட திண்ண வேண்டி நம்மபய
வயக்காட்டு சேத்துலேயே கெடக்கிறான்

கொளுத்துகிற கோடையிலும் மேட்டுக்குடி தோரணைக்காய்
கோட்டு சூட்டு போட்டுக்கிட்டே நிக்கிறான் - அங்க
குருதி உறையும் குளிரிலிருந்து காத்துக்கொள்ள நம்மபய
கிழிஞ்சு போன கோவணத்த தைக்கிறான்

கோடி கோடி பணத்த கொட்டி அஞ்சடுக்கு மாடி கட்டி
அதுக்குள்ள ரெண்டு பேரு தங்கறான் - அங்க
அவர கொடி பந்தலுக்கு அடியிலேயே அஞ்சாறு
புள்ளபெத்து அதுங்களோட தூங்கறான்

ஏற்றம் எறக்கம் இருக்குது; சேரி ஒதுங்கி கெடக்குது
சமத்துவத்த அடைஞ்சிட்டதா சொல்லுறான் - கூட
எல்லாரும் இந்நாட்டு மன்னன்தான்னு சொல்லிக்கிட்டே
எங்க மக்க கழுத்த நெறுச்சு கொல்லுறான்

ஏழைபணக்காரனென்றும் சாதியிலே தாழ்வு என்றும்
பாகுபாடு பார்க்கும் காலம் முடியுமா ? - இனி
நாட்டிலுள்ள மனிதரெல்லாம் சரி சமான மானத்தோடு
வாழும் நாளும் காலத்தோடு விடியுமா ?


- புதுவை பிரபா -