Wednesday, October 31, 2012

நான்காம் கண்


எரியூட்டப்பட தயாராய்
கிடத்தப்பட்டிருக்கும்
என்னைச்சுற்றிவர-
தண்ணீர் பானையை
என் தோளில் சுமத்தி
கத்தியால் கொத்தி
முதல் கண்ணை திறந்து
சுற்றிவரச் சொல்கிறான்
ஈமச்சடங்கு செய்பவன்

என் பிடியிலிருக்கும்
வாழ்க்கைப் பானையிலிருந்து
பீச்சி அடிக்கிறது
மண்ணாசை.

இரண்டாம் சுற்றின் தொடக்கத்தில்
இன்னொரு கண்ணை திறக்கிறான்.
கொட்டி தீர்கிறது
பொன்னாசை

கடைசி சுற்றிலும்
ஒரு கண் திறந்துவிடுகிறான்
வடிந்து அடங்குகிறது
பெண்ணாசை

பின்-
பானையை போட்டுடைக்கச்சொல்கிறான்
ஓங்கி தரையில் அடிக்கிறேன்
வெறும் காற்றடைத்திருந்த பானை
சிதறி தெறிக்கிறது

அதில் ஒரு சில்
என் மேல் பட்டதும்
கலைகிறது கனவு

மெல்ல திறக்கிறது
என் நான்காம் கண்

புதுவைப்பிரபா

No comments:

Post a Comment